Friday, January 27, 2012

கோலம் !!!




வீட்டு வாசல்லே கோலம் போட்டு எவ்வளவோ காலம் ஆச்சு !!! ஹ்ம்ம்ம்...

ஆமாம்... ஏன் கோலம் போடறோம்? அம்மா கிட்ட கேட்டேன். சின்ன வயசிலேயே கேட்டேன். அம்மா சொன்னாங்க, "எறும்பு, பூச்சி, காக்கா, குருவி எல்லாம் சாப்பிடறதுக்காக" - ன்னு !!! நான் கேட்டேன் "அதுக்கு எதுக்கு கோலம் போடணும்? சாப்பாடு வெச்சிட்டு போலாமே?". எப்புடி புத்திசாலித்தனமா கேள்வி கேட்டு மடக்குனேன் பாருங்க எங்கம்மாவ !

எங்கம்மா எனக்கு அம்மா இல்லையா ! அதனால என் களிமண் மூளைல பதிஞ்சு போற மாதிரி வெளக்கம் சொன்னாங்க. 

"சின்ன சின்ன ஜீவ ராசிக்கெல்லாம் தானியம் தான் சரியான சாப்பாடு. அதுக்காக தினமும் கொஞ்சம் தானியத்தை கொண்டு போய் கொட்டி வெச்சு அதுங்கள சோம்பேறி ஆக்க வேணாம். எப்பவும் போல தேடி தேடி சாப்பிடட்டும், ஆனா கொஞ்சம் கஷ்டமில்லாம தேடி சாப்பிடட்டுமேன்னு தான் தானியமான அரிசிய பொடி பண்ணி, சாப்பாடு மாதிரி குமிச்சு வெக்காம, வளைச்சு வளைச்சு போட்டு வெக்கிறோம். அதுவே வீட்டு வாசல்லே போடறதுனாலே, அழகா சீரா போடறோம். பாக்கவும் நல்லாருக்கும், சின்ன சின்ன ஜீவ ராசிங்களுக்கு பசியாத்தின மாதிரியும் இருக்கும்."

ம்ம்ம்... அம்மா சொன்னது சரியாத்தானே படுது. தேடி புடிச்சு படிச்சும் பாத்தேன். இதையேத்தான் அவங்களும் சொல்றாங்க. சரி... நல்லதுக்கு தானே சொல்லி வெச்சிருக்காங்க பெரியவங்க... முடிஞ்ச வரைக்கும் போடுவோம், கோலம்.

Thursday, January 26, 2012

பிள்ளையார் சுழி !!!




பிள்ளையார் சுழி போட்டாச்சு :-)

நான் மட்டுமா பிள்ளையார் சுழி போடுறேன்? ஊரே போடுது :-) ஏன் பிள்ளையார் சுழி போடுறோம்னு சொல்லட்டுமா ? நான் படிச்சதை சொல்றேன் கேட்டுக்கோங்க !!!

ஓலைச்சுவடி எழுதின காலத்தில, "அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே" - ன்னு எழுதிட்டு தான் எழுத ஆரம்பிச்சாங்க. அதுவே கொஞ்ச காலம் கழிஞ்சு, "அறிவோம்"- ங்கற வார்த்தை "அரி ஓம்" ஆச்சு !!! கொண்டு வந்துட்டாங்களா இங்கயும் சாமிய :-) ஆனா ஒண்ணு ! அந்த காலத்துல, பாட்டு எழுத ஆரம்பிக்கும்போதும், பாட்டு எழுதி முடிக்கும் போதும், பாட்டுக்கு எண்ணிக்கை போடும்போதும் கூட பிள்ளையார் சுழி போட்டாங்க !!!

இப்படி ஒரு பக்கம் சொல்றாங்க! இன்னொரு பக்கமும் இருக்கில்ல! அவங்க என்ன சொல்றாங்கன்னா, ஓலைச்சுவடியுடைய பதம் பார்க்க ஒரு சுழியப் போட்டு ஒரு கோடு போட்டு பாத்தாங்களாம். இது எப்படி இருக்கு?

ரெண்டுமே சரியாத்தான் படுது!!! நம்ம எப்பவுமே தெளிவா இருப்போம் இல்லையா ?!?!

சரி. இதுலே எங்கே பிள்ளையார் வந்தார்? யாருக்குமே தெரியலை! எல்லா விஷயத்துலயும் சாமி பெயர் சொல்லி செய்ய வெச்ச நம்ம தாத்தா பாட்டிக்கு, இது ஒரு பெரிய விஷயமா? இங்கயும் கொண்டு வந்துட்டாங்க சாமியை :-)

ஏன் சொல்றேன்னா... நம்ம தாத்தா பாட்டி எல்லாரும் பிள்ளையார கும்பிட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே... கல், மரம், ஓலைச்சுவடி எல்லாத்துலயும் எழுதவும் ஆரம்பிச்சிட்டிருந்தாங்களே !!!

சரி... பிள்ளையார்னு நெனச்சு போட்டாலும், "எல்லாம் நல்லதுக்கே"ன்னு நெனச்சு போட்டாலும், பேனா சரியா எழுதுதான்னு பாக்க போட்டாலும், நல்லதுக்கு போடற எல்லா சுழியும் "பிள்ளையார் சுழி" தான் !!!